இசைஞானி கலகலப்பு

பெப்சி அமைப்பின் செயலாளர் ஜி.சிவா இயக்கும் படம் குலசேகரனும், கூலிப்படையும். தனம் என்ற படத்தில் சங்கீதாவை ஏங்க ஏங்க காட்டி ரசிகர்களை கிறங்கடித்தவர் இவர்.


இந்த புதிய படத்தின் துவக்க விழாவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருந்தது. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதால், அவரையே முதல் வாழத்து சொல்ல அழைத்திருந்தார் சிவா.


விழாவில் கலந்து கொண்ட இன்னொரு ஆச்சர்யம் இசைஞானி இளையராஜா. பொதுவாக எந்த விழாவுக்கும் வருவதில்லை ராஜா. ஆனால் இந்த விழாவுக்கு வந்திருந்தவர், வெகுநேரம் அமர்ந்திருந்ததோடு கலகலப்பாக பலரிடமும் பேசிக் கொண்டிருந்தார். இத்தனை பேர் திரண்டிருந்தாலும் வராத ஒருவர் படத்தின் நாயகன் பிரகாஷ்ராஜ்தான்.


தனது வாழ்த்துரையில் இதையும் லேசாக குத்திக்காட்டினார் இசைஞானி. "வராதவங்களுக்குதான் முதல் வணக்கம் வைக்கணும். பிரகாஷ்ராஜுக்கு என் வணக்கம்" என்று அவர் சொல்ல, பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ராஜா இப்படியெல்லாம் பேச மாட்டாரே என்ற ஆச்சர்யத்தோடு கவனித்தார்கள் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள்.

0 Response to "இசைஞானி கலகலப்பு"

Post a Comment