வேட்டைக்காரன் பட விமர்சனம்

படத்தின் இயக்குனர் பாபுசிவன், விஜய்யின் பரம ரசிகராக இருந்திருப்பார் போலிருக்கிறது. விஜய் படத்தின் கதைகளையே சுட்டு விஜயிடமே கதை சொல்லியிருக்கிறார். 'பழைய சட்டை, பளபள பட்டன்' என்று காட்சிகள் அங்கங்கே கண்ணடிப்பதால் ரசனையும் அலுப்பும் ரவுண்டு கட்டி அடிக்கிறது.



+2 வில் பலமுறை பெயிலாகி, கடைசியில் பாஸாகிற விஜய்க்கு, அசிஸ்டென்ட் கமிஷனர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அவர் தாய் தந்தையாக வருவோர் படத்தின் முதல் காட்சியில் வந்தது தான், பின்னர் அவர்களைப் பற்றி பேச்சே இல்லை. இடையில் ஒரு காட்சியில் கூட வரவில்லை என்பது மிகுந்த ஆச்சரியம். பின்பு சென்னைக்கு வருகிறார் விஜய், புதிதாக சென்னை வரும் விஜய்க்கு அனைத்து சந்து பொந்துகளும் தெரிகிறது, உடனே ஆட்டோ ஓட்ட ஆரம்ம்பிக்கிறார், அது தான் எப்படி என்று தெரியவில்லை, கொஞ்சம் இயக்குனரிடம் கேட்கவேண்டும், ஒரு வேளை அவர் ஆட்டோவில் சட் நவ்( டாம் டாம் ) யூஸ்பண்ணி இருப்பாரோ என்று தோன்றுகிறது.



கமெரா ஒரு சதத்திற்கு உதவாவு, காட்சிகளைப் படம் பிடித்த விதம் படுகேவலம். அத்துடன் விஜய் அணியும் உடைகள் படுமோசம், விஜய்க்கு தொப்பை(வண்டி) இருப்பது இவர் போடும் இந்த உடுப்புகளால் தெளிவாக காட்டப்படுகிறது. அதாவது இவரை ஒரு மாணவன் எனச் சித்தரிக்க முயலவில்லை இயக்குனர், ஒரு அப்பாவைப் போலச் சித்தரித்துள்ளார் என்பதே உண்மை.




சென்னைக்கு வருகிறார் விஜய். வந்த இடத்தில் வம்புசண்டை. மெயின் வில்லன் சலீம் கோஷின் மகனை துவையல் ஆக்கி ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார். "யார்ரா அவன்? அவன் எனக்கு வேணும்?" என்று தேட ஆரம்பிக்கிறார்கள் சலீம் கோஷ்டியினர். தாறுமாறாக ஒரு வார்... (நார் நாராக கிழிவது நம்மை தவிர வேறு யார்?) இடது கையில் இந்திய ராணுவத்தையே மறைத்து வைத்திருப்பாரோ என்று ஐயுற வைக்கிற அளவுக்கு 'தடி தாண்டவராயன்'களை துவைத்து தொங்க போடுகிறார் விஜய். இதற்கிடையில் இவர் ஆதர்ஷ அதிகாரியாக நினைத்திருக்கும் ஸ்ரீஹரி, இதே வில்லன் கோஷ்டிகளால் என்னவானார் என்பதையும் அறிகிற விஜய், அதற்கும் சேர்த்து தனது நரம்பை புடைக்க, இடி, மழை, மின்னல், இன்னல் என்று கலவையாக அடிக்கிறது தியேட்டரில்!




நடுநடுவே வரும் விஜய்-அனுஷ்கா காதல் மட்டும் பூக்களின் சந்தை!


தமிழ்நாடே வியக்கும் ஒரு உதவி கமிஷனர், நடுரோட்டில் குருடாக்கப்படுவதும், அவர் குடும்பம் உயிரோடு தீக்கிரையாவதும், அதை ஒரு ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை என்பதும், திரைக்கதைக்கு மட்டுமே சவுகர்யமான மிஸ்டேக்! அந்த உதவி கமிஷனர் ஸ்ரீஹரி, திரையில் தோன்றும் போதெல்லாம் அதிர வைக்கிறார். பொறுத்தமான தேர்வு.



அதிரவே அதிராமல் வில்லத்தனம் செய்கிற சலீம் கோஷம் இன்னொரு அசத்தல். அதற்காக படத்தில் அவர் செய்கிற காரியங்களும், விஜய்யை அழைத்துக்கொண்டு போய் தன்னுடைய பராக்கிரமங்களை விவரிப்பதும் பேத்தல்! பயம்... பயம்... என்று காதருகில் கிசுகிசுக்கிறாரே, இன்னொரு முறை சொல்லித் தொலைப்பாரோ என்ற பயமே வருகிறது! இவர் எம்.எல்.ஏ ஆகாமலே மந்திரியாகி விடுகிறார் என்பது ஸ்கிரிப்ட்டில் விழுந்த ஸ்கிராட்ச்!


மொத்தத்தில் வேட்டைக்காரனுக்கு வேட்டு விழுந்துள்ளது அவ்வளவுதான். இதில் விஜய் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது என்றால் பாருங்களேன் !



இதைவிட சுவாரசியமான விடயம் என்னவென்றால், பல கொலைகள் மிகுந்த படமான பேராண்மைக்கு 18 வயதுடையவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று கொடுப்பதற்குப் பதிலாக 12 வயதுடையவர்கள் பார்க்கலாம் என ஐரோப்பாவில் சான்றிதழ் கொடுத்துவிட்டு, வேட்டைக்காரனுக்கு 15 வயதுடையவர்களே பார்க்கலாம் எனச் சான்றிதழ் வழங்கியுள்ளனர் ஐரோப்பிய சென்சர் போர்ட், இதனால் ஐரோப்பாவில் உள்ள பல தமிழர்கள் தமது பிள்ளை குட்டியுடன் சென்று படம் பார்க்க முடியாமல் திரும்பியுள்ளனர்.



சன் பிக்சர்ஸ் மற்றும் B4U அமைப்பும் மொத்தத்தில் இப்படத்தை எடுத்து ஐரோப்பாவில் நட்டத்தை சம்பாதித்திருப்பதாக அறியப்படுகிறது. படம் ஐரோப்பாவில் ஊத்திகிச்சு என்பதே உண்மை... இதில் சில அனுபவம் உங்களுக்கும் இருக்குமில்ல, வேட்டை ஆராம்பிச்சுடுத்துடோ......... ஊ ஊ ஊ ஊ ஊ ஊஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ...

வேட்டைக்காரன் சினிமா தறவிறக்கம் செய்ய...


"பா" - திரை விமர்சனம்

தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் நடித்திருக்கும் இல்லை இல்லை வாழ்ந்திருக்கும் படம் தான் பா. அமிதாப், அபிஷேக் வித்யா பாலன் என ஒரு சில குறிப்பிட்ட பாத்திரங்களுடன் சிறந்த கதையினாலும் இசையினாலும் மனதைக் கொள்ளையடித்துவிட்டது.

கதை

ஆரோ(அமிதாப்) progeria என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். அதாவது இந்த நோய் வந்தவர்கள் தங்கள் வயதை விட அதிகம் வயதுடைய தோற்றம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். ஆரோவின் பாடசாலைப் பரிசளிப்பு வைபத்துக்கு பிரதம விருந்தினராக வரும் அமோல்(அபிஷேக்)சிறுவன் ஆரோவின் வெள்ளையடிக்கப்பட்ட பூமிப் பந்தைப் பார்த்துக் கவர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறந்த மாணவன் விருதை வழங்குகின்றார். அத்துடன் அந்தச் சிறுவனின் நிலையைப் பற்றி ஊடகங்களுக்கும் அறிவித்தும் விடுகின்றார். இதனால் ஆரோவைத் தேடி அவனது பாடசாலைக்கு ஊடகங்கள் முற்றுகை இட இதனால் ஆத்திரமடைந்த ஆரோ இதற்க்கு காரணமான அமோலுக்கு தன்னுடைய எதிர்ப்பை மின்னஞ்சல் செய்கின்றான். இதிலிருந்து ஆரோவுக்கும் அமோலுக்குமான உறவு ஆரம்பிக்கின்றது.



அமோல் யார் என்றால் ஆரோவின் தந்தை என்பதையும் அவருக்கும் வித்யாவிற்க்கு(வித்யா பாலன்)இடையிலான காதலில் கருத்தரித்தவன் தான் ஆரோ என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகின்றார் இயக்குனர். இந்த வேண்டாத கர்ப்பத்தால் வித்யா அமோலை விட்டுப் பிரிந்துவிடுகின்றார்.


ஆரோ தன் தந்தை அமோல் தான் என்பதை அறிந்தாரா? வித்யாவும் அமோலும் சேர்கின்றார்களா? என்பதை 2 மணித்தியாலம் 15 நிமிடங்களில் சொல்லும் கதை தான் ஹிந்தியில் வெளியான பா(Paa).


ஆரோ :


நெடிதுயர்ந்த கம்பீரமான குரலில் பார்த்துப் பழக்கப்பட்ட அமிதாப் பச்சனை வயது போன தோற்றத்தில் வித்தியாசமான குரலில் ( ஒரு பாடல் கூடப் பாடியிருக்கின்றார்)பார்ப்பது புதுமை. எந்தவொரு இடத்திலும் அமிதாப்பை தெரியவில்லை ஆரோ தான் தெரிந்தான்(ர்). தன்னுடை கண்களாலே சில இடங்களில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். எத்தனையோ கான்கள் வந்தாலும் எப்படி அமிதாப்பால் இன்றைக்கும் ஹிந்தி சினிமாவில் நின்று நிலைக்க முடிகின்றது என்ற கேள்விக்கு தன் நடிப்பாலே பதில் சொல்லியிருக்கின்றார். தான் ஒரு நோயாளி என்பதைத் வெளிக்காட்டாமல் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் நக்கல் நையாண்டிகள் செய்வதும் ஆரோவின் வயது 12 தான் என்பதை உணர்த்துகின்றது. சில படங்களில் மாற்று ஆற்றல் உள்ளவர்களை ஏனைய நண்பர்கள் கிண்டலடிப்பார்கள், ஆனால் பாவில் கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவிய சிறுமியைத் தவிர ஒருவர் கூட ஆரோவின் இயலாமையை கிண்டல் செய்யவில்லை. அமிதாப்பின் குரலும் ஒப்பனையும் நேர்த்தி.

திரைக்கதை :

ஒரு சோகமான செண்டிமென்டான கதையை நகைச்சுவை, காதல், அரசியல் பழிவாங்கல்கள், பாசம் என்ற பல கலவைகளினூடாக கொண்டு சென்றிருக்கின்றார் இயக்குனர் பால்கி. ப்ப்ப்பா என ஜெயாப் பச்சான் திரைப்படத்தின் கலைஞர்கள் ஒவ்வொருவராக தன் குரலினூடக அறிமுகப்படுத்துவதுடன் அறிமுகம் அமிதாப் பச்சான் என்பதிலிருந்து ஆரம்பித்த திரைக்கதை, தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கின்றது. இடைவேளையில் அதிர்ச்சியான ஒரு விடயத்தை எந்தவித ஆர்ப்பாடமும் இன்றிச் சொல்வதில் நிறுத்தி மீண்டும் அடுத்த பாதியில் சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்தாலும் குறையில்லாத திரைக்கதையாகவே இருக்கின்றது.

வசனம் :


படத்தின் பலமே வசனங்கள் தான்( ஹிந்தி தெரியாவிட்டாலும் ஆங்கில சப் டைட்டில் காப்பாத்திவிட்டது). அமோலும் ஆரோவும் பேசுமிடங்கள் அதிலும் அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு ஆரோ கொடுக்கும் விளக்கத்தில் தியேட்டரே கலகலத்தது. வித்யா பாலனும் அவரது அம்மாவும் ஒரே வசனத்தில் கர்ப்பத்தை என்ன செய்வது எனப் பேசுவது எனப் பல இடங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.


இயக்கம் :


ஏற்கனவே "சீனி கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பால்கியின் இரண்டாவது படம் இது. ஆரம்ப காட்சிகளில் இருந்து இறுதிக்காட்சிவரை நேர்த்தியான இயக்கம். அதிலும் ஒரு சோகமான கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. அத்துடன் ஒருவித்தியாசமான கதைக் களத்தில் ( சில வேளைகளில் கதையின் சாயல் அஞ்சலியை நினைவுபடுத்தினாலும் அது வேறை இது வேறை)ஒரு சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு திறம்பட இயக்கியிருக்கின்றார். :

இசை அல்லது இளையராஜா :


ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.

ஒளிப்பதிவு :

இன்னொரு நம்மவர் பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கின்றன. சில கமேராக் கோணங்களும் குளோசப் காட்சிகளும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றவை. ஒரு காட்சியில் வித்யா பாலனினதும் அமிதாப்பினதும் முகம் மட்டும் திரையை இருவரின் கண்ணீருடன் நிறைக்கும் சிம்ப்ளி சூப்பர்.

அபிஷேக் :
அப்பாவுடன் போட்டி போட்டு நடிக்கவேண்டிய பாத்திரம், தன்னால் முடிந்ததைச் செய்திருக்கின்றார். சில இடங்களில் குருவில் பார்த்த நடிப்பு. குறைசொல்லமுடியாத அளவிற்க்கு நடித்திருக்கின்றார்.
வித்யா பாலன் :
ரேவதி, சுஹாசினி இருவருக்கும் பின்னர் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காட்டியுள்ளார். முகத்தினாலையே பல இடங்களில் அழுகின்றார், கேள்வி கேட்கின்றார் காதல் வயப்படுகின்றார். தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் நடிக்கலாம்.
ஆரோவின் தந்தை, வித்யாவின் தாய், ஆரோவின் நண்பன் விஷ்ணுவாக வரும் அந்தச் சிறுவன், ஆரோவின் ந‌ண்பியாக வரும் அந்தச் சிறுமி( கோல்ட் வின்னர் விளம்பரச் சிறுமி)போன்ற பாத்திரங்களும் தங்கள் பங்கை திறம்படச் செய்திருக்கின்றார்கள்.
நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கதால் பா எல்லோர் மனதையும் நிச்சயம் கவரும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எழுந்த கேள்வி தமிழில் ஏன் எப்படி வித்தியாசமான கோணங்களில் கதைகள் வருவதில்லை?
"பா" ர்த்தேன் ரசித்தேன்

கந்தகோட்டை - திரை விமர்சனம்

ஒருவர் ஊராரின் காதல்களைப் பிரிப்பவர் இன்னொருவரே ஊராரின் காதல்களை ஊட்டி வளர்ப்பவர் இவர்கள் இருவருக்கும் காதல் பத்தினால் என்னவாகும் என்பதை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொன்ன படம் கந்தகோட்டை.



கதை :


நகுலன் ஊராரின் காதல்களை பிரிப்பவர் இதற்க்கு இவர் சொல்லும் காரணம் தனது பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தும் சின்னச் சின்ன விடயங்களுக்கு சண்டை பிடிக்கின்றார்கள் இதனால் இவருக்கு காதலின் மேல் வெறுப்பு. பூர்ணா ஊரார் காதல்களைச் சேர்த்து வைக்கும் ஷாஜகான் விஜயின் பாத்திரம் போன்றவர். நகுலனின் காலணியான கந்தகோட்டைக்கு ஒரு காதலைச் சேர்த்து வைக்க வரும் பூர்ணா அங்கே நகுலனைச் சந்திக்கின்றார். இன்னொரு காதலர்களின் காதலைப் பிரிக்க ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்த காதல் உண்மையான காதல் என்பதை அறிந்த நகுலன் காதலையும் பூர்ணாவையும் ஒரே நேரத்தில் விரும்புகின்றார். இடைவேளையின் பின்னர் காதலுக்கு ஒரு புதிய வில்லன் அந்த வில்லனக்கு எப்படி நகுலன் திட்டமிட்டு ஆப்படிக்கின்றார் என்பதுதான் கதை.

திரைக்கதை :

முதல் பாதி சந்தானத்தினால் கலகலப்பாகவும் இரண்டாவது பாதி நகுலன் சம்பத் மோதல்களில் விறுப்பாகவும் போகும் திரைக்கதை. சில காட்சிகள் சில படங்களில் பார்த்த ஞாபகம் வந்தாலும் கொஞ்சம் விறுப்பான திரைக்கதை என்பதால் உடனே மறைந்துவிடுகின்றது. அத்துடன் அடுத்து என்ன நடக்கும் என்பதை பல இடங்களில் ஊகிக்க முடிகின்றது. அதிலும் இந்தக் காட்சி முடியப் பாடல் என்பதை திரையரங்கில் இருப்பவர்கள் சத்தம் போட்டே உணர்த்துகின்றார்கள். நல்ல காலம் கடைசிக் காட்சிக்கு முன்னால் பாடல் வைக்கவில்லை.

வசனம் :
முதல் பாதியில் சந்தானம் அடிக்கும் லூட்டிகளில் வசனங்கள் கலக்கல் நகைச்சுவை. காதலித்த பெற்றோர்கள் சின்னச் சின்ன விடயங்களுக்குச் சண்டை போடுவது குற்றமில்லை எனச் சொல்லும் இடங்களிலும் வசனங்களில் சக்திவேல் விளையாடியிருக்கின்றார்.

இயக்கம் :

ஏற்கனவே அறிந்ததிரைக்கதையாக இருந்தாலும் இயக்குனர் சக்திவேல் இதனைச் சொன்னவிதம் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றது. இயக்குனர்கள் ராதாமோகன், ப்ரியா.வி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த சக்திவேலுக்கு முதல் படம் எனச் சொல்லமுடியாதபடி நேர்த்தியான இயக்கம்.


சந்தானம் :

படத்தின் உண்மையான கதாநாயகன் சந்தானம் தான். சின்னக் கவுண்டர் அடிக்கும் லூட்டிகள் நிலை மறந்து ரசித்துச் சிரிக்கும் படி இருக்கின்றது. அதிலும் இவர் ஒவ்வொரு பெண்ணாக காதலிக்கும் போது "அசிலி பிசிலி", கண்கள் இரண்டால் என பின்னணியில் ஒலிக்கும் பாடல்களால் தியேட்டரே அதிர்கின்றது. இவரது கனவுக் காதலும் கலக்கல். வழக்கமாக இரட்டை அர்த்தம் மூன்று அர்த்தம் பேசுபவர் இந்தப் படத்தில் அவற்றை குறைத்தே இருக்கின்றார் அல்லது இல்லை.


நகுலன் :
நகுலன் இன்னமும் நடிக்கத் தொடங்கவில்லை என்றே சொல்லலாம். மாசிலாமணியில் நடித்த அதே நடிப்புத்தான். நடனக் காட்சிகளில் நன்றாக ஆடுகின்றார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசமாக அடித்தாலும் முகத்தில் புன்னகை இருப்பது போல் தெரிகின்றது. வில்லனுடன் மல்லுக் கட்டும் இடங்களில் ரசிக்கவைக்கின்றார்.
பூர்ணா :
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டில் நடித்தவராம். மலிவு விலை ஸ்ரேயா போல் இடைக்கிடை தெரிந்தாலும் தன் பங்கு நடித்திருக்கின்றார். பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி இல்லாமல் கொஞ்சம் குத்துவிளக்காகவே வந்து போயுள்ளார். இவரை விட சுனைனாவையே இந்தப் படத்திலும் கதாநாயகி ஆக்கியிருக்கலாம் என்பது என் கருத்து.
சம்பத் :
வில்லனாக வரும் சரோஜா புகழ் சம்பத் தன் மகனுக்காக வேதனைப் படும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கின்றார். ஆனால் வயது போன தோற்றம் அவருக்குப் பொருத்தமாகவே இல்லை. பாலாசிங் கூட அதே அரசியல்வாதி பச்சைத் துண்டுடன் வந்துபோகின்றார். வில்லனை இன்னும் கொஞ்சம் வில்லத்தனமாக காட்டியிருக்கலாம்.
இசை :
நீண்ட நாட்களின் பின்னர் தினா. மனிசன் இன்னமும் மன்மதராசாவில் இருந்து விடுபடவில்லைப் போல் தெரிகின்றது. அதே பாணியில் அதே போன்ற ஆடைகளுடன் ஒரு பாடல். "காதல் பாம்பும்",எப்படி என்னுள் காதல் வந்ததுதும்" ரசிக்கவைக்கின்றது. ஆனால் ஏனைய பாடல்கள் இம்சை. பின்னணி இசை அதிலும் சண்டைக்காட்சிகளில் இரட்டிப்பு இம்சை. படத்தின் பெரிய பலவீனமே இசைதான்.
ஒளிப்பதிவு :
இ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் வெளிநாடுகளின் அழகை அழகாக படம் பிடித்திருக்கின்றது. ஆனால் சென்னை நாகர்கோவில் காட்சிகளில் ஏதோ ஒன்று குறைந்தது போல் தெரிகின்றது.
மொத்தததில் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாகப் பார்க்ககூடிய படம்.
கந்தகோட்டை - காதல் அதிர‌டி

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

ஷதெனாவட்டு' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர், பூனம் பாஜ்வா. அந்த படத்தில் இவர், ஜீவா ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து பரத் ஜோடியாக, ஷசேவல்' படத்தில் நடித்தார். இப்போது, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ஷகச்சேரி ஆரம்பம்' படத்தில், மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்.


இதே படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், சிறப்பு தோற்றமாக நிஷா கோத்தாரி பங்குபெறுகிறார். ஷஷவாடா வாடா பையா...என் வாசல் வந்து போயா...என் வாசல் தாண்டி வந்து வாசம் வாங்கிப் போயா...'' என்று தொடங்கும் அந்த பாடல் காட்சியில் ஜீவா, பூனம் பாஜ்வா, நிஷா கோத்தாரி ஆகிய மூன்று பேரும் நடனம் ஆடினார்கள்.


இதற்காக, ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. ஷவஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம்பெற்ற போட்டி நடன பாடல் போல், இந்த பாடலிலும் பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் போட்டிபோட்டு நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.



பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் விட்டுக்கொடுக்காமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே நீயா, நானா? என்ற சவால் எழுந்தது. அது, சண்டையாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள். இருவரும் கைகலப்பில் இறங்குகிற சூழ்நிலை ஏற்பட்டதால், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


நடிகர் ஜீவாவும், டைரக்டர் திரைவண்ணனும் குறுக்கிட்டு, இருவருக்கும் இடையே சமரசம் செய்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது. பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் ஜீவாவுடன் தொடர்ந்து நடனம் ஆடினார்கள்.

கண்டேன் காதலை கொண்டாட்டம்

பரத், தமன்னா நடிப்பில் வெளியான கண்டேன் காதலை படம் 50 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.. முன்பெல்லாம் 100 நாட்களைத் தொட்டால்தான் விழா கொண்டாடுவார்கள்.


ஆனால் இன்றைய நிலையில் பத்து நாட்கள் ஓடினாலே விழா கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. கண்டேன் காதலை டீம் 50வது நாளை கொண்டாடியிருக்கிறது. வெளியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக இந்த படம் ஓடிக் கொண்டிருப்பதாலேயே இந்த விழா.



சென்னையில் இந்தப் படம் வெளியான 11 தியேட்டர்களிலும் இன்னும் கலெக்க்ஷனில் இடிக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறதாம். (ஆச்சரியமான விஷயம்தான்.!) கமலா தியேட்டரின் உரிமையாளர் திரு சிதம்பரம் இதற்கு முன்பு வெளியான கந்தசாமி படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துவிட்டதாக சொல்கிறார்.

குழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்!

அஜீத் ரசிகர்கள் சிலர் தங்கள் ஆர்வத்தில் அசல் திருவிழா என்னும் பெயரில் 100 மன்றங்கள் திறக்கப் போவதாக அறிவிக்க, இவர்கள் செய்வது மன்ற கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அறிவித்துள்ளார் அஜீத் ரசிகர்களின் தலைமை மன்ற நிர்வாகி சுரேஷ் சந்திரா.
இதுகுறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 20ம் தேதி மதுரையில் அசல் திருவிழா என்ற பெயரில் தலைவராலும் தலைமை இயக்கத்தாலும் அங்கீகரிக்கப்படாத ஒரு விழா நடைபெற இருப்பதாக விளம்பரங்கள் வந்தபடியே உள்ளது.


நமது இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் அல்லாத ஓரிருவர் தங்கள் சுயலாபத்திற்காகவும் முழுக்க முழுக்க தங்களை வளர்த்துக்கொள்ளவும் எண்ணற்ற நம் தலைவரின் ரசிகர்களை நூறு மன்றம் திறக்கிறோம். இதற்கு நம் தலைவரின் ஆசி உண்டு என்று கூறி ரசிகர்களை திசை திருப்புவதாகும். நம் தலைமை இயக்கத்திற்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.



நமது இயக்கத்தின் அடிப்படையே ஒற்றுமையுணர்வே என்பதை உணராமல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கும் விருப்பு வெறுப்புக்கும் உட்பட்டு தலைமை இத்தகைய விழா நடத்த வேண்டாம் என்று கேட்டு கொண்ட பிறகும் தங்கள் சுய லாபத்திற்காக ரசிகர்களை பிரிப்பவர்களை தலைமை வன்மையாகக் கண்டிக்கிறது.



இந்த விழாவில் கலந்து கொள்வோருக்கும் இந்த 100 மன்றம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் இயக்கங்களுக்கும் தலைமை எக்காலத்திலும் அங்கீகரிக்காது என்பதையும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
தலைமை இயக்கத்திற்கு முன் கட்டுப்பாட்டில் வரும் மாவட்ட இயக்கங்களின் வாயிலாகத்தான் புதிய இயக்கங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும் என்பதையும் இயக்கத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் வாயிலாக எந்த ஒரு அங்கீகாரமும கிடைக்காது என்பதையும் அறிக.
வருகிற ஜனவரி மாதம் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடை பெறும் போது மதுரை நகர் பகுதி, கிளை நிர்வாகிகளை தலைமை நிர்வாகி நேரில் சந்திப்பார் என்பதையும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
குறைகள் இருப்பின் அதனை தலைமையிடம் முறையாக தெரிவித்து கால அவகாசம் கொடுக்காமல் சுயலாபத்திற்காக அப்பாவி ரசிகர்களை அலைகழிக்கும் அந்த சுய நல கூட்டத்தை தலைமை வன்மையாக கண்டிக்கிறது..." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மதுரை அஜீத் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அசல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள பக்ருதீன் என்பவர் தெரிவித்தார்.



அவர் நம்மிடம் கூறுகையில், "இந்த விழாவுக்கு முறையாக நான் அனுமதி பெற்றுள்ளேன். 3 லட்சம் ரூபாய் வரை கைக்காசை செலவழித்து ஏற்பாடுகள் செய்த நிலையில் சுரேஷ் சந்திரா இப்படி அறிக்கை விட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.



நான் பிரபல நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு ரசிகர்களை ஏய்த்துப் பிழைக்கும் வேலை தேவையில்லை. என்னை நம்பி ஒரு கூட்டமே இருக்கிறது. இந்த 100 மன்றங்கள் மூலம் 6000 ரசிகர்கள் புதிதாக அஜீத் மன்றத்தில் உறுப்பினராக காத்திருந்தார்கள். அஜீத் மீதுள்ள உண்மையான பாசத்தில் நான் இதையெல்லாம் செய்தால், என்னைப் போய் பணம் வசூல் செய்பவன் என்று அசிங்கப்படுத்துகிறார்கள்.



இப்போது நான் தலைமை மன்றத்திடம் கேட்டால், விரைவில் இந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை தருவேன். அதுவரை பொறுத்திரு என்கிறார். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. இப்படிப்ப்டட குழப்பங்களால் பல ரசிகர்களை இழக்கிறார் அஜீத் என்பதுதான் உண்மை" என்றார்.

விஷால் வைக்கும் சஸ்பென்ஸ்

விஷாலைப் போலவே ரசிகர்களும் தீராத விளையாட்டு பிள்ளையை காண ஆவலாக இருக்கிறார்கள். தனுஸ்ரீ தத்தா, நீது சந்திரா, சாரா என்று மூன்று கிளாமர் குயின்களல்லவா நடித்திருப்பது.


இவர்களுடன் சினேகாவும் நடித்திருக்கிறார் என்பது பழைய செய்தி. படத்தின் போக்கையே மாற்றி அமைக்கும் கதாபாத்திரம் என்பதால்தான் சினேகா நடிக்க ஒத்துக் கொண்டாராம். அவரது கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ்.
படத்தில் இன்னொரு சஸ்பென்சும் இருக்கிறது. “தீராத விளையாட்டு பிள்ளையில் சினேகாவையும் சேர்த்து நான்கு ஹீரோயின்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்தாவதும் ஒரு ஹீரோயின் இருக்கிறார். அவர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறோம். படம் பார்க்கும் போதுதான் அவர் யார்? அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க என்ன காரணம் என்பது ரசிகர்களுக்கு தெ‌ரியவரு‌ம் என்றார் விஷால்.


அழுத்தி கேட்டும் அசையவில்லை விஷால். ரகசியம் காப்பதில் விஷாலுக்கு டாக்டரேட் தரலாம்.

கிளாமர் சென்

ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த பிறகு ‌‌ரீமா சென்னை எல்லோரும் கிளாமர் சென் என்றுதான் அழைப்பார்கள். அந்தளவுக்கு கவர்ச்சி காட்டாறாக பிரவாகம் எடுத்திருக்கிறாராம் ஆயிரத்தில் ஒருவனில்.


செல்வராகவனின் இந்த காஸ்ட்லி படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ச‌ரித்தர காலத்து நிகழ்வுகளும் படத்தில் இடம்பெற்றிருப்பது முக்கியமான அம்சம். ‌ரீமா சென், ஆண்ட்‌ரியா இருவரும் ஹீரோயின்கள்.
இதில் ராணுவ அதிகா‌ரியாக நடித்திருக்கிறார் ‌‌ரீமா சென். ஆனாலும், மிலிட்ட‌ரி உடையைவிட கிளாமர் உடையில்தான் அதிகம் படத்தில் தோன்றுகிறாராம். இதுவரை இல்லாத அளவுக்கு என்று அழுத்தி சொல்கிறது பட யூனிட். மேலும், விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டிருக்கும் ஸ்டில்களிலும் ‌ரீமா செம தாராளம்.


இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா?


எல்லை மீறாமல் நடித்திருக்கிறேன். இதில் எனக்கு என்ன பிரச்சனை என்று எதிர் கேள்வி கேட்கிறார் ‌‌ரீமா சென். பார்ப்போம் சென்சார் என்ன செய்கிறதென்று.

சிம்பு - மன்னனா இல்லை..?

சிம்பு நடிக்கும் அடுத்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவது தெ‌ரிந்த விஷயம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தயா‌ரித்துவரும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தையும் தயா‌ரிக்கிறது.


சுபா கதை, ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் மியூசிக் என எல்லாமே அயன் டீம்.
அயன் போலவே இதற்கும் வித்தியாசமான ஒரு பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தின் பெயர் 'கோ'.
கோ என்றால் மன்னன். பசு என்று கோ-வுக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கே.வி.ஆனந்த் மன்னன் என்ற பொருளில்தான் இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்.



ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. வெளிநாட்டில் நடக்கவிருக்கும் பாடல் கம்போஸிங்கிற்கு பிறகு படம் குறித்து முறைப்படி அறிவிக்கயிருக்கிறார்கள்.

நிகில் பேச்சு...நெக்குருகிய விஷால்!

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேவி திரையரங்கில் நடந்தது.

முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரில் அரிவாள், துப்பாக்கி இல்லாத விஷாலை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள் ரசிகர்களும், மேடையில் இருந்த விருந்தினர்களும். கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, “இந்த படத்திலே அரிவாள் துப்பாக்கிக்கு பதிலாக விஷால் கையில் மூன்று ஹீரோயின்களை கொடுத்திட்டாரு டைரக்டர். பார்ப்போம்... எப்படி ஹேண்டில் பண்ணியிருக்காருன்னு” என்றார்.



படத்தின் மூன்று ஹீரோயின்களில் விழாவுக்கு வந்திருந்தவர் நீது சந்திரா மட்டுமே. வணக்கம், நன்றி என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளை தெள்ளந் தெளிவாக கற்று வைத்திருப்பார் போலும். ஆனால், “சீக்கிரம் தமிழ் கத்துப்பேன்” என்று உறுதி மொழி அளித்தார். விஷால் பேச்சில் அநியாயத்துக்கு நிஜம். “ரசிகர்கள் எப்படி நடிச்சா கை தட்டுவாங்களோ, அப்படி யோசிச்சுதான் இந்த படத்தை எடுத்திருக்கோம். நான் நடிச்ச படங்களுக்கு பெரிய அளவில் ஆடியோ ரிலீஸ் வைத்ததில்லை.


இப்படி ஒரு விழா எடுக்கணும்னு நினைச்சவுடன் யாரையெல்லாம் கூப்பிடலாம் என்று யோசிச்சோம். நாம நல்லாயிருக்கணும்னு மனசார வாழ்த்துறவங்களை மட்டும் கூப்பிடலாம் என்று முடிவு செஞ்சோம். இங்கே மேடையில் இருக்கிற எல்லாரும் நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க” என்றார்.



“பென்ஹர் படத்தை கூட தமிழ்லே ரீமேக் பண்ணிடலாம் போலிருக்கு. ஆனால் மூன்று ஹீரோயின்களை ஒரு படத்தில் நடிக்க வைக்கிற கஷ்டம் இருக்கே...?” என்று அவர் பெருமூச்சு விட, அந்த சோகக்கதையை அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிந்தது.



முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய நிகில் முருகன், விஷால்-விக்ரம் கிருஷ்ணா அண்ணன் தம்பி பாசத்தை இதிகாச புராண பாத்திரங்களோடு ஒப்பிட்டு பேச, நெக்குருகி நின்றார் விஷால்!

ஸ்ரேயாவின் விபாஸனா...

விபாஸனா எனும் புதிய யோகக் கலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் 'சைஸ் ஜீரோ' புகழ் ஸ்ரேயா.
கடந்த சில தினங்களாகவே ஸ்ரேயாவின் கவனமெல்லாம் முழுக்க முழுக்க தியானம் மற்றும் யோகாவில் லயித்துள்ளது குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.



அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயா கிட்டத்தட்ட மௌன விரதம் இருந்து வருகிறாராம் கடந்த சில தினங்களாக.
10 நாள்கள் தொடர்ந்து இந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டுமாம். இதற்காக, தனது அனைத்து படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்ட ஸ்ரேயா, மும்பையில் உள்ள யோகா மைத்திலேயே தங்கி இந்த பயிற்சியை கற்று வருகிறார்.


விபாஸனா என்பது இந்தியாவின் மிகப் பழமையான யோகக் கலை. உலகை அதன் நடைமுறை நிஜங்களோடு அணுகுவதுதான் இந்தக் கலையின் மையக் கருத்து. கனவுலகில் கதாநாயகியாகத் திகழும் ஸ்ரேயாவுக்கு இந்த யோகத்தின் மீது நாட்டம் வந்தது ஆச்சர்யம்தான்.


ஆழ்ந்த உள்வாங்கலோடு கற்க வேண்டிய கலை இது என்பதால்தான், ஸ்ரேயா 10 நாளும் தியான மையத்திலேயே தங்கியுள்ளாராம்.
இந்த யோகத்தைக் கற்றுத் தர இந்த மையம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லையாம். இந்த விபாஸனா யோகத்தின் மூலம் கிடைத்த பலனை அதைப் பெற்றவர்கள் உலகுக்குச் சொன்னால் போதுமாம்.
அப்ப இனி ஸ்ரேயாவிடமிருந்து நிறைய விபாஸனா உரைகளைக் கேட்கலாம்!

குரு சிஷ்யன் விவகாரம்...வடிவேலு கடுப்பு

குரு சிஷ்யன் என்று ஒரு படம். பழைய படங்களை உல்டா செய்து தரும் சக்தி சிதம்பரத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பு இது.
இவருடைய பெரும்பாலான படங்களில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களில் வடிவேலுதான் ஹீரோ எனும் அளவுக்கு நகைச்சுவையில் புகுந்து விளையாடியிருப்பார் மனிதர்.


நிற்க.. இடையில், சுந்தர்.சிக்கும், வடிவேலுவுக்கும் தகராறு ஏற்படவே, சுந்தர்.சி படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார் வடிவேலு.
இந் நிலையில், சுந்தர்.சி., சத்யராஜை வைத்து சக்தி சிதம்பரம் குரு சிஷ்யனை ஆரம்பித்தார். இப்படத்தில் வடிவேலுவும் இருந்தால்தான் பலம் என்று நினைத்து அவரை அணுகினார்.



சுந்தர்.சி படம் என்று யோசித்துள்ளார் வடிவேலு. இருப்பினும், வடிவேலுவை சமாதானப்படுத்தி சுந்தருடன் நடிக்க வைக்க முயற்சித்தனர். சக்தியே கூப்பிடுகிறாரே என்ற நல்லெண்ணத்தில் வடிவேலுவும் ஒப்புக் கொண்டு அட்வான்ஸும் வாங்கினார்.


ஆனால், அவர் கொடுத்த கால்ஷீட்டுகளை இயக்குனர் பயன்படுத்திக் கொள்ளாமல் இழுத்தடித்துள்ளார். வடிவேலுவை வைத்து ஒரு காட்சியைக் கூட படமாக்காமல் படப்பிடிப்பையே நடத்தி முடித்து விட்டாராம் சக்தி.



ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த வடிவேலு இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. அட்வான்ஸை திருப்பித் தந்துவிடுகிறேன் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கையே கொடுத்தார். அட்வான்ஸை அவர் கொடுக்க முயற்சித்தபோதும் யாரும் பெற்றுக் கொள்ளவில்லையாம்.
எனவே நடிகர் சங்கத்தில் சிதம்பரம் மீது ஒரு புகார் கொடுத்தார் வடிவேலு. 'குரு சிஷ்யன் படத்துக்காக நான் கொடுத்த 'கால்ஷீட்' தேதிகளை சக்தி சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை' என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்.



ஆனால், எப்படியாவது வடிவேலுவை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். காரணம் வடிவேலு நடிக்கிறார் என்று கூறித்தான் படத்தை வியாபாரம் செய்திருந்தார் சக்தி சிதம்பரம். இப்போது வடிவேலு இல்லாவிட்டால் படம் போண்டியாகி விடும் என்று பீதியாகி விட்டது அவருக்கு.



எனவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், வடிவேல் மீது ஒரு புகார் கொடுத்தார். 'குரு சிஷ்யன் படத்தில் நடிப்பதற்கு வடிவேல் சம்மதித்து, 'அட்வான்ஸ்' வாங்கியிருந்தார். எனவே அவரை அந்த படத்தில் நடித்துக் கொடுக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்' என்று புகாரில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.



இந்த புகார்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும், நடிகர் சங்க நிர்வாகிகளும் விசாரணை நடத்தி, 'குரு சிஷ்யன்' படத்துக்காக வடிவேல் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதற்கு வடிவேலுவும் சம்மதித்தார்.




இதைத்தானேய்யா நானும் ஆரம்பத்திலேயே சொன்னேன்... என்று தன்னை விசாரித்தவர்களிடம் கடுப்போடு கூறிவிட்டுச் சென்றாராம் வடிவேலு!.

எங்கே போனார் பானு?

‘தமிரபரணி’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த பானு, கேரள வரவு என்பதால் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பார் என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள்.




அந்த படமும் நன்றாக ஓடியது. ஆனால் நயனுக்கு பின்னால் இவர், பல கிலோமீட்டர்கள் தூரத்தில் பின்னுக்கு இருந்தார். இவருக்கு அதற்குப் பின்பு வந்த வாய்ப்புகள் ஒன்றிரண்டு என்றாலும் அதையும் கதை சரியில்லை அது... இது... ஏதேதோ சரியில்லை... என்று வந்தவர்களை விரட்டி அனுப்பினார். தமிழில் அதற்குப் பிறகு இவர் ஆர்.கே.யுடன் இணைந்து நடித்த படம் ‘அழகர்மலை’. பேருதான் ‘அழகர்மலை’ ஆனால், படம் அழகா இல்லையே... என்ன பண்றது. இந்தப் படம் ஓடாததால் மார்க்கெட் சுத்தமாக அவுட்டாகி விட இப்போது வீட்டில் உட்காரந்து கேரம் ஆடிக்கொண்டிருக்கிறார் பானு. கவலைப்படாதீங்க... உங்களுக்குன்னு ஒரு கதையை தமிழ்சினிமா இயக்குநர்கள் தயார் பண்ணி எடுத்துட்டு வராமலாப் போயிடுவாங்க...!

ஜீவாபூங்காவில் ‘சரண்யா’

‘வண்ணத்துப்பூச்சி’ படத்தை இயக்கியதன் மூலம் பெற்றோர்களுக்கு அறிவுரை சொன்ன அந்தப் படத்தின் இயக்குநர் அழகப்பனுக்கு தமிழ்நாடு திரைப்பட விருது கிடைத்துவிட ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்.



இவர் இயக்கத்தில் தருண்கோபி நடிக்கும் படம் ஜீவாபூங்கா. இந்தப் படத்திற்கு நாயகியை தேடோ தேடு என்று தேடினார்கள். நீண்டநாட்களாகவே யாரும் சிக்காமலே இருந்தார்கள். கடைசியில மாட்டிக்கொண்டது பேராண்மையில் நடித்த சரண்யாவாம். அவரை அப்படியே கையோடு புக் செய்திருக்கிறார்கள். தருண்கோபிக்கு இவ்வளவு அழகான கதாநாயகியா என்று ஹீரோக்கள் பலருடைய மனதில் தந்தி அடிக்கிறதாம்.



என்ன பண்ண கொடுப்பினை அப்படி...!

விஜய்யின் புதிய கண்டிஷன்

இனிமே விஜய் படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமில்ல, எந்த ஒரு தனிப்பட்ட பெரிய விநியோக கம்பெனியிடமும் தயாரிப்பாளர் விற்க முடியாது. காரணம், வேட்டைக்காரன் ஏற்படுத்திய கசப்பான அனுபவம் தானாம்.


ஏ.வி.எம். தயாரிப்பில் விஜய் நடித்த ‘வேட்டைக்காரனை’ சன்பிக்சர்ஸிடம் விற்றுவிட்டு அப்பாடா என்று ஏவிஎம் ஒதுங்கிக் கொள்ள, படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் அதில் கொஞ்சம் எடிட்டிங் செய்துவிட்டதாக விஜய்க்கு காதுவழி செய்திகள் போயிருக்கின்றன.



இதனால் கோபமான விஜய், படத்தை பார்க்க வேண்டும் என்று அவரது அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.. உடனே அவரும் எ.வி.எம்..மிற்கு போன் செய்ய அவர்களோ, ரைட்ஸ் எல்லாமே சன் பிக்சர்ஸிடம் தான் இருக்கிறது நான் என்ன செய்வது... இருந்தாலும் கேட்டுச் சொல்கிறேன்... என்று சொல்லிவிட்டு சன்பிக்சர்சுக்கு போனைப் போட, அவர்களோ இப்போதைக்கு முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். இதை தயங்கித் தயங்கியே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சொல்லியிருக்கிறது ஏ.வி.எம். தரப்பு. இதைக் கேட்டு கோபமுற்ற அவர், ‘என்ன இது அநியாயமா இருக்கு... படத்தில நடிச்ச ஹீரோவுக்கே போட்டு காட்ட மாட்டேங்குறாங்க... படம் ரிலீசாகிறப்ப தான் பார்க்கணுமா...?’ என்று கோபப்பட எப்படியோ ஒரு வழியாக தயாரிப்புத் தரப்பு அவரை சமாதானப்படுத்தியிருக்கிறது.



இந்த அனுபவத்தினால் இனிமேல் படம் ஒப்பந்தம் போடும் போதே நேரடியாக விநியோகஸ்தருக்கே படத்தை விற்க வேண்டும் என்று ஒரு கண்டிஷனையும் போடப்போகிறாராம் விஜய்.



படம் ஓடினா சரி.

ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள்

ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன.


அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.


விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற்றும் இயக்குனர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.



இத்திரைப்படத்துக்கு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் உத்ரியன் இசையமைத்துள்ளார். மற்றும் திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குனர் தரன் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக மோகன், திரு ஆகியோரும், படத்தொகுப்பை பன்னீர்செல்வம், இணை இயக்கம், வசனம் ஜீவரத்தினமும் பணியாற்றியுள்ளனர்.



கதை, திரைக்கதை அமைத்து தரன் இயக்கியுள்ளார். விடியல் திரைப்படத்தை பொன்னுச்சாமி தயாரித்துளார்.



நிலா திரைப்படம் முழுக்க முழுக்க கனடிய மண்ணிலேயே தயாரிக்கப்பட்டது. நிலா திரைப்படத்தில் சுதன், நவநிதா, ருபா, வினோத், விஜய், மாலன், சூரி, ராஜா, சங்கர், ஜிவன், உதயன், ராணி இவர்களுடன் இயக்குனர் தரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



இத்திரைப்படத்துக்கு இசையமைப்பை அண்மையில் தமிழின படுகொலையைப் பற்றி இதுவே இதுவே நிலையா என்ற பாடலை வெளியீட்ட கனடிய இசையமைப்பாளர் சிறீஜிவன் பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.



படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜன் தனது காமரா கண்களால் அழகாக படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பை தமிழ்நாட்டில் உள்ள தொழிழ்நுட்பக் கலைஞர் பன்னீர்செல்வம் மற்றும் படத்தின் டப்பிங்கை தமிழ்நாட்டுக் கலைஞர்கள் சினிமாத் தமிழில் பேசியுள்ளனர்.


நிலா திரைப்படத்தின் கதை திரைக்கதை அமைத்து இயக்குனர் வி.எம்.தரன் இயக்கியுள்ளார். படத்தை வி.கந்தசாமி ஜெகன் தயாரித்துள்ளார்.

ஊரே பத்தி எரியுது!!! இதுக்குள்ள விஜயா அல்லது அஜித்தா என்று அடிபாடு வேற நடக்குது.

வேடக்காரனைப் பொறுத்தவரையில் விஜய் எப்போதோ சம்பளத்தினை வாங்கி இருப்பார். அவருக்கு இந்தப்படம் ஓடாவிட்டால் பண நட்டம் இலலை. இதனால் பாதிக்கபடப்போவது படத்தை வாங்கிய புலம்பெயர் மக்களே ஆனால் அவர் மன்னிப்புக் கேட்காமல் அலட்சியப்படுத்தினால் அவரது 50வது படம் "சுறா" புலம்பெயர் தேசங்களில் நெத்தலி ஆகும்!!!




அப்படி என்ன விஜய் செய்துவிட்டார்?


விஜய் ஈழத்தமிழரின் மருமகன் என்ற நம்பிக்கையினைக் கொடுத்துவிட்டு ராகுலைச் சந்தித்தது தவறு. சந்தித்த நேரம் தவறு. சந்தித்தமுறை ( இரகசியமாய்) தவறு. பின் மாட்டியவுடன் தமிழரைக் கொல்ல உதவிய அந்த நேரத்தில் காங்கிரசின் கொள்கை பிடித்தமையால் சந்தித்தேன் என்று சொன்னது மாபெரும் தவறு!!!



அது ஒருபுறம் இருக்க அன்பர் விஜய் அன்ரனி TN07 AL4777 என்ற படத்தில் "ஆத்திசூடி" என்ற பாடலில் சிங்கள மொழி வரிகளை டினேஷ் கனகரத்தினம் சேர்க்க அனுமதித்து இருந்தார். அதன்பின்னர் அன்பர் அன்ரனி யாழ்பாணத்தில் நடந்த "வடக்கின் வசந்தம்" என்ற சிங்களவர் நடத்திய நிகழ்ச்சிக்கு அந்தக்குழுவுடன் இராணுவக் கெலியில் (மகிந்தவின் மகனுடன்) சென்றிருந்தார். அங்கு சென்றவர் பின்னர் இராஜ் வீரறட்ணையுடன் சேர்ந்து வேலை செய்தார்.



அதில் ஒரு பாடல்தான் "சின்னத்தாமரை". மற்றய பாடல்கள் வெளிவருமாயின் அவர் புலம்பெயர்தேசங்களுக்கு வரக்கூடியதாக இருக்கும் என்பது ஐயம்! அன்பர் ஈழத்தமிழரிடம் மன்னிப்புக் கேட்பது புத்திசாலித்தனம். அவரே முடிவெடுக்கட்டும்.யார் இந்த இராஜ் வீரறட்ணே? சிங்கள அரசுடன் சேர்ந்து அவர்கள் இராணுவத்தினை தெய்வம் என்று வணங்கும் பாடலை உருவாக்கியவர் அத்துடன் அதில் நடித்தவர்.



அதுமட்டும் அன்றி "கொத்து" என்ற பாடலில் எங்கள் தேசியத்தலைவரை நையாண்டி செய்தவர். ( தலைவர்போல ஆடிப் பின் வெடித்துச் சிதறுவார். இவரும் புலம்பெயர்தேசங்களில் வெளிப்படையாக நடந்து திருவது ஐயம்! இந்தப்புறக்கணிப்பினால் சொல்லவருவது?



01. இனிமேல் திரைப்படங்களினைத் தயாரிக்கும்பொது சிங்களவர்களை இணைத்து வேலைசெய்யக்கூடாது


02. உலகத்தமிழர் முட்டாள்கள் இல்லை என்பதை உணரவேண்டும்


03. உலகத்தமிழர்களை அலட்சியமாய் அவமதிக்கக்கூடாது. யாவரும் நாம் தமிழர் என்ற குடைக்குள் ஒன்றுபடுவோம்.



ஐரோப்பிய இளையோர் அமைப்பு

பா படம்... ரஜினி விருப்பம்

பா படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யும் அளவு உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.
சென்னையி்ல் நேற்று முன்தினம் பா திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினி. அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரும் இந்தப் படம் பார்த்தனர்.



படம் பார்த்து விட்டு, கருத்து தெரிவித்த ரஜினி, "அமிதாப் எப்போதுமே அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்து வந்துள்ளார். மொழிகளைத் தாண்டி இந்தப்படம் பெரும் வரவேற்பைப் பெறும். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார்.


இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, "அதுபற்றி இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது" என்றார் ரஜினி.


ரஜினி நடித்தால் கண்டிப்பாக அது 'சூப்பர் பா'..!

ஆர்.கே. நடத்தும் ஸ்னூக்கர் போட்டி

தொழிலதிபரான ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு ஓடியதைத் தொடர்ந்து, ‘அழகர்மலை’ படத்திலும் ஹீரோவாக நடித்தார்.



அடுத்து இயக்குநர் பி.வாசு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ஆர்.கே. இவர் சமீபத்தில் ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற உணவகத்தை சென்னை தியாகராய நகரில் தொடங்கினார். இந்த உணவகத்துடன் இணைந்த விஐபி ஆக்ஸஸ் கிளப் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தையும் நடத்தி வருகிறார்



ஆர்.கே. இங்குள்ள வி.ஐ.பி. அக்ஸஸ் கிளப்பில் சர்வதேசத் தரம் கொண்ட ஸ்நூக்கர் அரங்கு அமைத்துள்ளார். இந்த அரங்கில் விஐபி மேட்ரிக்ஸ் ஆல் இந்தியா இன்விடேஷன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.. போட்டியில் வெல்லும் வீரருக்கு முதல் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இரண்டாவது வீரருக்கு ரூ. 90,000மும் அரையிறுதி வரை வரும் வீரருக்கு ரூ 50000-மும், காலிறுதிப் போட்டி வரை வரும் வீரர்களுக்கு ரூ 25000-மும் பரிசாக வழங்கப்படும்.




வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுகின்றது : நேஹா தூபியா

அதீத கவர்ச்சி யுடன் நான் இருப்பதே எனக்கு எதிராகப் போய் விட்டது என்று கூறியுள்ளார் நேஹா தூபியா.

ஷாருக்கானும், செக்ஸும்தான் பாலிவுட் டில் நல்ல விலை போய்கிறது என்று கூறி முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் நேஹா. தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது இவ்வாறு கூறியிருந்தார்.



இந்த நிலையில் தற்போது கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுவதாக கூறியுள்ளார் நேஹா. அதீத கவர்ச்சியாக தான் இருப்பதே தனக்கு எதிராக போய் விட்டதாக சலிப்புடன் கூறுகிறார் நேஹா.


முன்னாள் மிஸ் இந்தியாவான நேஹா கயாமத், ஜூலி படங்களில் பிரமாண்டக் கவர்ச்சியுடன் கலக்கியவர். தான் சீரியஸ் ரோல்களில் நடித்தும் கூட கவர்ச்சிகரமான கேரக்டரில்தான் என்னை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்கிறார் நேஹா.




செக்ஸி என்ற வார்த்தையையே நான் வெறுக்க ஆரம்பித்துள்ளேன். அந்த அளவுக்கு அது எனக்கு எதிராக போய் விட்டது என்று கூறும் நேஹா, நான் நல்ல கேரக்டர்களில் நடித்துள்ள மித்யா, சிங் இஸ் கிங், மகாரதி ஆகியவற்றை மக்கள் மறந்து விட்டனர். இது வருத்தமாக இருக்கிறது என்கிறார்.

வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.


இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.

ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை : ஸ்ரேயா

ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை ஸ்ரேயா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.


ஸ்ரேயா தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினி யிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.


இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.


அதற்கான வாய்ப்பை அவர் தான் ஏற்படுத்தித் தர வேண்டும். அவருடன் மீண்டும் எத்தனை படங்களிலும் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நயன்-ஆர்யா நாகரிகம்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. தன்னுடன் நடிக்கும் நடிகைகளை நெருக்கமான வட்டத்திற்குள் இழுத்துக் கொள்வது அவருக்கு கைவந்த கலை.


பூஜாவை இறுக அணைத்தபடி போஸ் கொடுப்பார். நிலாவை உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு பேட்டியளிப்பார். கேட்டால் நட்பு என்பார். அந்த நட்பு பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை போலிருக்கிறது நயன்தாரா விஷயத்தில்.



பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய ஆர்யா, கேக்கை நயன்தாரா வாயில்தானே ஊட்டியிருக்க வேண்டும்? ஆனால் வெட்டிய கேக்கை டீசண்ட்டாக அவர் முன் நீட்டினார். அவரும் அதை வாங்கி தானே சுவைத்துக் கொண்டார். பதிலுக்கு தானும் ஒரு கேக்கை எடுத்து ஆர்யா கையில் கொடுத்து அன்பை தெரிவித்தார் நயன். இப்படி பட்டும் படாமலும் பர்த் டே ஃபங்ஷன் நடந்தாலும், நெருக்கமான காதல் காட்சிகளில் நீந்தி விளையாடி இருக்கிறார்களாம் இருவரும்.


கொஞ்ச நாட்களாக சென்னை படப்பிடிப்பை தவிர்த்து வரும் நயன், மீண்டும் தனது கெடுபிடிகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்.


வேறொன்றுமில்லை, வாலிபனின் பின் தொடர்ந்தல் முற்றிலும் நின்றுவிட்டதுதான் காரணம்!

ரஜினிக்கு 60வது பிறந்த நாள்

நடிகர் ரஜினி யின் 60வது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் கோலாகலமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் ரஜினிக்காக சிறப்புப் பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


அன்னதானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தனது பிறந்த நாளின்போது வழக்கமாக வெளியூர் சென்றுவிடும் ரஜினி இம்முறை சென்னையில் தான் இருப்பதாகத் தெரிகிறது.


ஆனால், தனது பிறந்தநாளை வீட்டிலேயே மிக அமைதியாக தியானம், வழிபாடு என சிம்பிளாக முடித்துக் கொண்டார் ரஜினி. வெளி நபர்கள் யாரையும் இன்று அவர் சந்திக்கவில்லை.

டைட்டானிக் இயக்குநரின் அடுத்த படம்

‘டைட்டானிக்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூன் இயக்கிய படம் ‘அவதார்’. இந்தப் படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 14 வருடங்களுக்கு முன்பே ஜேம்ஸ் காமரூன் உருவாக்கிய கதை இது.



ஒரு கிரகத்தில் மரம் செடி, கொடிகள் அனைத்தும் தான் நினைத்த உருவத்தை உடனே மாற்றும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன. அங்கு வாழும் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் போராடுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக பூமியில் இருந்து கதாநாயகன் புறப்படுகிறான்.


இவர்கள் அனைவரும் யாரை எதிர்த்துப் போராடுகிறார்கள்? ஏன் போராடுகிறார்கள்? அவர்களுக்கு உதவப் போன ஹீரோவின் நிலை என்ன இப்படிப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அவதார் படம். இந்தப் படத்தை டிவென்டியத் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.. டைட்டானிக் வசூலை இந்தப் படம் முறியடிக்குமா?

மீடியாக்களுக்கு சினேகன் கடிதம்

யோகி’யில் இரண்டாவது நடிகராக வந்துக் கலக்கியவர் சினேகன். இவர் பாடலாசிரியரும் கூட. யோகியில் இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு வெளியான, மீடியாக்களின் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.


இது குறித்து சினேகன் பத்திரிகையாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்…


கவனிப்பார் இன்றி கிடக்கும் திரை உலக குழந்தைகளுக்கு அன்னை தெரசா போல ஆதரவு தரும் மீடியா நண்பர்களுக்கு, உங்களால் புகழப்பட்ட சினேகன் நன்றி மடல்!


அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்காது, விமர்சிக்கபடாத நடிகன் சிறந்த கலைஞனாக முடியாது!! உங்கள் விமர்சனங்கள் என் வாழ்கைக்கு வலு சேர்த்து இருகின்றது, இரண்டாவதாக வருபவனை உலகம் ஒரு போதும் நினைவு வைத்துகொள்ளாது என்ற வார்த்தையை பொய்யாக்கி “யோகி”யில் இரண்டாவதாக வந்த என்னை மக்களிடையே முதலாவதாக கொண்டு சென்றது.. உங்கள் விமர்சனம்தான்.


விமர்சனங்கள் எல்லோர் மீதும் பாயும், ஆனால் புத்திசாலிகள் மட்டுமே அதை உபயோகபடுத்திக்கொள்வார்கள், நான் அடையும் உயரம் என் சிறகுகளின் பலத்தை பொருத்தது, என்னை மேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும் பலமான சிறகுகள் நீங்கள் தான்.. கொலம்பஸ் பாதி வழியில் தன் பயணத்தை முடித்து, வந்தவழி திரும்பி இருந்தால், வரலாறு அவரை நினைவு வைத்துக்கொண்டு இருக்காது.. நானும் திரைகடலில் பாடலாசிரியர் என்ற பலத்துடன் நடிகனாகவும் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன், நீங்கள் தான் என் கலங்கரை விளக்குகள், உங்கள் வழிகாட்டுதலுடன் என் பயணம் வெற்றி பயணமாகட்டும்.ந்த சடையனை, தமையனாக பாவித்து நீங்கள் தந்த விமர்சனத்திற்கு நன்றி…


நட்போடும்,
நன்றியோடும்,
சினேகன்

தன்ஷிகாவுக்கு மளமளவென படங்கள்

‘பேராண்மை’யில் ஐந்து பெண்களில் ஒருவராக வந்து நடிப்பில் நின்று முத்திரை பதித்தவர் தன்ஷிகா. இவர் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.


பேராண்மையின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு மளமளவென படங்கள் புக் ஆக ஆரம்பித்தன. இப்போதைக்கு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தன்ஷிகா மேலும் கதைகளைக் கேட்டு வருகிறார்.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘மாஞ்சா வேலு’ படத்திலும் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு நடிக்கும் நில் கவனி செல்லாதே படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.



‘படங்களில் ஒப்பந்தம் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதனால்தான் கதைகளை கேட்டு, அலசி ஆராய்ந்த பின்னரே ஓ.கே. சொல்கிறேன்...’ என்று சொல்லும் தன்ஷிகா மேலும் நான்கு படங்களுக்கு இம்மாதம் இறுதிக்குள் கால்ஷீட் கொடுத்து விடுவேன் என்கிறார்.

சொன்னதை செய்த த்‌ரிஷா

மும்பையில் செட்டிலான பிறகு தென்னிந்தியா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை அசின். தமிழில், தெலுங்கில் கால்ஷீட் கேட்டதற்கும் நோ ரெஸ்பான்ஸ்.


ஆனால் இதெல்லாம் லண்டன் ட்‌‌ரீம்ஸ் வெளியாவதற்கு முன்பு. படம் பப்படம் ஆனதால் புதிய படம் எதிலும் அசினை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்கள். விளைவு?


கலைமாமணி விருது வாங்க சென்னை வந்தவர் அப்படியே சில முக்கிய புள்ளிகளிடம் தமிழில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். விஜய்யின் 51 வது படத்தில் அவர்தான் ஹீரோயின் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
அசினின் நிலை தனக்கு வரக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் த்‌ரிஷா. இந்தியில் நடிப்பதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என அவசர அவசரமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.



தமிழில் ஆடுகளம், தெலுங்கில் பிருந்தாவனம் படங்களை மறுத்தவர் திடீரென்று தெலுங்கில் கோபி இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் ரவி தேஜா. கிருஷ்ணா படத்தின் வெற்றிக்குப் பிறகு த்‌ரிஷா, ரவி தேஜா ஜோடி சேரும் படமிது.



பறப்பதை நம்பி இருப்பதை இழக்க‌க் கூடாதில்லையா... விரைவில் த்‌ரிஷாவின் தமிழ்ப்பட அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

‌ரிஸ்க் எடுக்கும் ஜனநாதன்

பேராண்மை வெற்றிக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் மீதான எதிர்பார்ப்பு அதிக‌ரித்திருக்கிறது. ச‌ரித்திர‌க் காதல் கதையை இயக்குகிறாரா? இல்லை புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கிறாரா? முடிவு தெ‌ரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.


காரணம், ச‌ரித்திர காதல் அல்லது புதுமுகங்களை வைத்து பிரமாண்டமாக ஒரு படம். இந்த இரண்டில் ஒன்றை இயக்குவதாக கூறியிருந்தார் ஜனநாதன்.
திடீர் திருப்பமாக தனது அடுத்தப் படத்தை தானே தயா‌ரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஜனநாதன். தயா‌ரிப்பாளர் தலையீடு இல்லையென்றால் நினைத்தபடி படத்தை இயக்கலாம் என்பதே இதற்கு காரணம்.


ஒரு படம் இயக்கியவர்களே தயா‌ரிப்பாளர் ஆகும்போது, ஜனநாதன் டூ லேட். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டான படம் தருவார் என்று உறுதியாக நம்பலாம்.

பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்டு!

“அட்வைஸ் சொல்றவங்க அப்பால போங்க...” நயன்தாராவின் இந்த துடுக் பேச்சால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் அவருக்கு நெருக்கமான அட்வைசர்கள்.


அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டிக்கு தொட்டின்னு தெரியுமா? பட்டின்னு புரியுமா? துள்ளி ஓடி தொட்டியிலே விழுந்த மாதிரி தப்பு தப்பாக முடிவெடுப்பதாக புலம்புகிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.


லேட்டஸ்ட் புலம்பல் இது. “யாரையும் கேட்காமலேயே கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சாரு. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது மீண்டும் ஒரு படம். எப்படிதான் புரியப் போவுதோ” என்கிறார்கள். மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. “இப்படியே அவரு முக்கியம், இவரு முக்கியம்னு ஆட ஆரம்பிச்சா நயன்தாராவுக்கு போட்டியா ரகசியாதான் வந்து நிப்பாரு” என்று அழாத குறையாக சொல்கிறார்கள் அவர்கள். போகட்டும்... இன்னொரு சங்கதி.



முதல்வர் கையால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை வாங்க ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நயன். அந்த விருது வழங்கப்பட்ட நாளில் இவர் வெளிநாட்டில் இருந்தாராம். படப்பிடிப்பை விட்டு விட்டு வர இயலாது என்பதால்தான் வராமல் இருந்துவிட்டாராம்.


சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லியாச்சு என்கிறார் அவர். அப்படின்னா சரி...