
இவரது குரல் நம் அனைவருக்கும் அறிமுகம் ஆனது தான். பீமா ஜூவல்லர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், அருண் ஐஸ்க்ரீம், பவர் சோப்,அடையார் ஆனந்தபவன் போன்று எத்தனை எத்தனை விளம்பரங்களில் இவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எண்ணற்ற விளம்பரங்களில் கேட்டுக் கேட்டு செவியில் விழுந்து பலரது இதயம் நுழைந்து இக்குரலுக்கு சொந்தக்காரர் சுவி.
இவரது காந்தக் குரல் விளம்பரங்களில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் பிரபலம். இப்போது உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன மணிரத்னத்தின் 'ராவணன்' படப் பாடல்கள். அப்படத்தில் வரும் 'கொடாக்கரி' பாடலைப் பாடியிருப்பவர் சுவிதான்.
இதற்கு முன் 'சரோஜா' வில் 'கோடானு கோடி', ஏகனில் 'யாஹோ', 'அலிபாபா'வில் நெஞ்சில் ஆத்தாடி,'லாடமி'ல் 'மக்கா', ' ஐந்தாம் படை'யில் 'ஷோக்கு சுந்திரி', கஜினியில் லாட்டூ..., சர்வமில் 'ஆதவன்', வாமனனில்' லக்கி ஸ்டார், 'மாசிலா மணி' யில் 'ஒடி ஒடி விளையாடு', பேராண்மையில் துப்பாக்கிப் பெண்ணே', நான் அவனில்லை -2ல் பாக உன்னாரா போன்ற பிரபல தமிழ்ப்பட பாடல்களில் ஒலித்த குரல் சுவியினுடையது தான்..
தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று மொழிகளில் பாடி வருகிறார்.
மலையாளத்தில் 'பை த பீப்பிள்' படத்தில் எல்லாப் பாடல்களைப்

பாடியதுடன் இசைக் கலைஞராகவே படத்தில் தோன்றி நடித்துள்ளார். சுவியின் சாரீரம் மட்டுமல்ல சரீர வாரும் அழகானது தான் என்று பாராட்டப் பட்டார்.
இன்று பிரபலமாகி பலரது காதுகளுக்குள் கவரி வீசும் கந்தர்வக் குரல்காரர் சுவி. இவர் பாட ஆரம்பித்த முன் கதை தெரியுமா?
இவர் குரல் முதன் முதலில் தேர்வானது ஏதோ அதிர்ஷ்டத்தாலோ குலுக்கல் முறையிலோ அல்ல. முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலானது.
சுவி சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டம்.
எஸ்.எஸ். மியூசிக் நிறுவனம் ஒரு குரல் தேர்வு நடத்தியது. அது தேர்வல்ல குரல் வேட்டை என்றே சொல்ல வேண்டும். ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் ஜீவனுள்ள குரல்களை பல வடிக்கட்டில் வைத்து கடைசியில் ஜமக்காளத்தில் வடிக்கட்டி தேர்வு செய்தது. கலந்து கொண்ட 5000 பேரில் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும் என்றால் சுலபமானதல்ல அல்லவா? அவ்வளவு சோதனைக்களுக்கும் பிறகு ஐவர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் சுவி. ஐயாயிரத்திற்கு ஐவர். இந்தக் கணக்குப்படி பார்த்தால் சுவி 'ஆயிரத்தில் ஒருவர்' என்று கூறலாம். அத்தேர்வில் இறுதி சுற்றில் சுவியுடன் வெற்றி பெற்ற பிற நால்வர் பென்னி தயாள், அனித்தா நாயர், பார்கவி பிள்ளை, அர்ஜுன் சகி ஆகியோர்.
இப்படி தன் 17 வது வயதிலேயே ஆயிரத்தில் ஒருவராக அற்புதக் குரல் வளத்துக்காக தேர்வு செய்யப்பட்டவ்ர் சுவி. இவ்வாறு தேர்வானவர்கள் ' S5' என்று அழைக்கப்பட்டனர்.
அவர்கள் இணைந்து ஒர் ஆல்பத்தில் பாடினர் பெயர். 'இசை' அதில் சுவி 'மலரே' பாடலைப் பாடினர். ப்ரவீன் மணி இசையமைத்தார். சோனி BMG நிறுவனம் வெளியிட்டது. இதை ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். இது நடந்தது 2005 இன்றும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்.
முதலில் ஆல்பத்தில் பாடிய சுவி, திரையில் பாடப் புகுந்து ஏ.ஆர். ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யா சாகர் போன்ற பிரபலங்களின் இசையிலும் பாடிவிட்டார்.
இசைக் கலைஞர்கள் டோனி பிராக்ஸ்டன், கிறிஸ்டினா அகிலேரா, ஸ்டிங், மைக்கேல் ஜாக்சன், சங்கர் மகாதேவன் போன்றோரின் பாணிகள் சுவியைக் கவர்ந்தவையாம்.
'ராவணன்' படத்தில் பாடலில் மட்டுமல்ல உலக அழகி ஐஸ்வர்யா ராய் தோன்றும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் 'தீம் மியூசிக்' கில் ஒலிப்பதும் சுவியின் குரல்தான்.
பின்னணியில் பாடுவது மட்டுமல்ல மேடையில் தோன்றிப் பாடுவது -ஆடுவது- பாடிக் கொண்டே ஆடுவது சுவிக்குக் கை வந்த கலை, மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் நடந்த இசை சமர்ப்பண அஞ்சலி நிகழ்ச்சியில் சுவி ஆங்கிலப் பாடலைப்பாடி ஆடி அசத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பாடும் சுவி ஆங்கிலத்தில் பாடவும் பாடும் பாடலை எழுதவும் தெரிந்தவர். ப்ரவீன் மணி இசையில் இப்போது உருவாகி வரும் ஆல்பத்தில் வரும் ஆங்கிலப்பாடலை எழுதியிருப்பது சுவிதான். இந்த ஆல்பம், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் உருவாகி வருகிறது.
பாடிக் கொண்டே இருப்பதே தன் லட்சியம் என் கிற சுவி தனி இசைக்குழு உருவாக்கி தலைமையேற்று இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது தான் கனவு என்கிறார்.
சுவியின் இசைக்கனவுகள் இனிதே மெய்ப்பட வாழ்த்துவோம்.